கிருஷ்ணகிரி,ஜூன் 19 - கற்கால சான்றுகளை தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சென்னானூரில் அகழ்வாராய்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார். ஊத்தங்கரை பாம்பாறு கரையோரம், சென்னானூர் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப் பானையோடுகள் அதிகம் உள்ளது. போச்சம்பள்ளி அருகே அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மயிலாடும் பாறையை போன்று இப்பகுதியும் உள்ளது.
இங்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும் 100 பழங்கால செங்கற்களைக் கொண்டு சுவர் எழுப்பியுள்ளனர்.
நிலத்தின் அடியிலும் செங்கற்கள் வரிசையாக இருப்பதாக இப்பகுதியிலிருந்து தெரியவருகிறது. இந்த செங்கற்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இதன்மூலம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இப்பகுதி இருக்கக் கூடும் என தெரிகிறது. இங்கு 8,9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்தோடு கூடிய நடுகற்கள், 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் கிடைத்துள்ளன. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளதால், இங்கே அகழாய்வு துவங்கப்பட்டது.தமிழகத்தில் பழைய கற்காலம், இரும்புக் காலத்துக்கான ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
இக்காலங்களுக்கு இடைப்பட்ட புதிய கற்கால வாழ்விடப் பகுதிகளைக் கண்டறிந்து, வரலாற்று சான்றுகளை சேகரிக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, புதிய கற்கால வாழ்விடமான இங்கு அதற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இங்கு அகழாய்வு ஓராண்டு வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். சென்னானூர் அகழாய்வு இயக்குநர் பரந்தாமன்,பொறுப்பாளர் வெங்கட குரு பிரசன்னா, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவனம் முருகன், மாவட்ட வரலாற்று ஆய்வுக் குழுத் தலைவா் நாராயணமூர்த்தி உடனிருந்தனர். ஏற்கெனவே கிடைத்த அரிய வகை பழங்காலப் பொருள்களை ஆட்சியர் பார்வையிட்டார்.