districts

img

சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன. 24- ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தலித் மக்களுக்காக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்துள்ளதால் புதியதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஓசூர் ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமங்களில் 1983இல் பிரதமர் இந்திரா காந்தி வீடு கட்டும் திட்டத்தில் தலித் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. பலவனப்பள்ளி இரு பகுதிகளில் உள்ள 25 வீடுகள், சின்னமுத்தாலியில் 10 வீடுகள்,  கொலதாசபுரத்தில் 25 வீடுகள் என மொத்தம் 60 தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் அனைத்தும் தொங்கிக் கொண்டுள்ளன. ஜன்னல்கள் முழுவதும் உடைந்தும், சுவர்களின் பூச்சுக்கள் பெயர்ந்தும், விரிசல்விட்டும் காணப்படுகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இந்த வீடுகள் உள்ளன. மேலும் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தலித் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாராயணப்பா, முனியப்பா, சின்ன சொன்னலிங்கப்பா, கோபாலப்பா ஆகியோர் கூறுகையில், “எப்போதாவது கிடைக்கும் விவசாய கூலி வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டே வாழ்ந்து வரும் எங்களுக்கு 1983இல் கட்டித்தரப்பட்ட இந்த வீடுகள் மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்தும், சுவர்களில் இருந்தும் நீர் கசிந்து விட்டுக்குள் குளம்போர் தண்ணீர் தேங்கி நிற்கும்” என்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கூரையின் பூச்சுகள் முற்றிலும் பெயர்ந்து விழுந்து, இரும்புக் கம்பிகள் உள்பகுதியில் தொங்கிக் கொண்டுள்ளன. சுவர்கள்  விரிசல் விட்டு ஈரத்துடன் இருப்பதால் மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனேயே இரவில் உறங்குகிறோம் என்றும் கூறினர். இந்த பிரச்சனை குறித்து 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வேதனையை வெளிப்படுத்தினர்.  

2018 - 2019இல் ஓசூர் ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சில வீடுகள் மராமத்து பணி பார்க்கப்பட்டதாகவும், சில வீடுகளில் தலா 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒருபக்க சுவர் வைத்து சுகாதார கழிப்பிடம் கட்டியதாகவும் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தொகுப்பு வீடுகளும் எந்த மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, எஸ்.ஆர்.ஜெயராமன் ஆகியோர் சிதிலமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தலித் மக்களின் தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பு புதிதாக கட்டி கொடுக்கவும், அனைத்து வீடுகளுக்கும் இலவச மனைப்பட்டா வழங்கவும் மாவட்ட ஆட்சியரும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.