கிருஷ்ணகிரி, மே 20- சாதிச் சான்று கேட்டு விண்ணப்பம் செய்து 10 ஆண்டுகளை கடந்தும் பரிசீலிக்காமல் காலம் கடத்தி வரும் அதிகாரிகளை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயற்சி சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் செல்லக்குட்ட பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக்-மங்கம்மா. பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு முறையே பத்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகன், மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஆதிதிராவிடர் (எஸ்சி) சாதிச் சான்று கேட்டு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 10 ஆண்டுகளாக மனு அளித்தும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கார்த்திக் அவரது மனைவி மங்கம்மாள் மகன், மகள் ஆகிய நான்கு பேரும் சாதிச்சான்று கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு கொடுக்க வந்தனர். அப்போது, திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, தற்கொலைக்கு முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் உடடினயாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, பத்தாம் வகுப்பு படித்து வரும் மகளிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சாதிச் சான்று கேட்டு வருகிறார். சாதிச்சான்று கொடுக்கவில்லை என்றால் பள்ளிச் சான்று வழங்க முடியாது என்றும் 12 ஆம் வகுப்பு சேர்க்கைக்கும் சிரமம் ஏற்படும் என கூறுகிறார். எனவே, நாங்கள் கொடுத்துள்ள மனு குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி உடனடியாக சாதிச் சான்று வழங்க வேண்டும்” என்றனர்.