districts

img

குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம், ஜூன் 17- காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் குடும்பத் தகராறில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 

மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்துவருபவர் டில்லி ராணி (32). இவர் தனது கணவர் மேக நாதன் மற்றும் இரு குழந்தைகளுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக கணவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டிருந்த நிலையில் நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக விடுமுறை எடுத்திருந்த நிலையில், திங்களன்று மீண்டும் பணிக்கு வந்து சங்கரமடம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது மேகநாதன் அங்கு வந்து தகராறு செய்தாக கூறப்படுகிறது.  வாக்கு வாதம் முற்றிய நிலையில் மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லி ராணியை கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரி வித்தனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் எஸ்.பி.சண்முகம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இதுகுறித்து அவரிடம் விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அவருக்கு தேவையான முதல் உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சீருடையில் இருந்த பெண் காவலரை கணவரே கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.