districts

img

கள்ளக்குறிச்சி: 40 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சிறுவன்  

சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 40 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ். இவர் தனது நண்பர்களான சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்தனர். அப்போது சதீஷ், பூமிநாதன் இருவரும் நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த நிலையில் சுரேஷ் கரையில் நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தான். அதன்பிறகு சுரேஷ் குளிப்பதற்காக நீர்வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.  

இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.  இந்த நிலையில் மோட்டாம்பட்டி – கூடலூருக்கும் இடையே உள்ள மணிமுக்தா ஆற்றின் கரையோரம் பாறையை ஒட்டி நின்ற மரக்கிளையில் எலும்புக்கூடு ஒன்று சிக்கியிருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரிகாலன் போலீசார், விசாரணை நடத்தியதில் மரக்கிளையில் சிக்கிய எலும்புக்கூடுடன் கிடந்த சட்டை மற்றும் பேண்டை அடையாளமாக வைத்து 40 நாட்களுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சுரேஷ் என தெரிய வந்தது. அதன்பிறகு சிறுவனின் எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.      

;