கள்ளக்குறிச்சி, அக்.5- கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பாசார் ஊராட்சியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அக்டோபர் 2 அன்று காந்தி பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் 11 மணிக்கு தொடங்கி 11.48க்கு முடித்தனர். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்அனுஜாபழனி பேச அனுமதிக்காமல், கூட்டத்தின் பொருட்களை மட்டும் படித்த ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், ஏற்கனவே எழுதி எடுத்து வந்த தீர்மானம் நோட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்டு ஆக்கப்பூர்வமான முறையில் விவாதம் செய்ய ஆர்வமாக வந்துள்ள பாசார் ஊராட்சி சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். எனவே பாசார் ஊராட்சியில் பெயரளவில் மட்டுமே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மாவட்ட கலெக்டரின் தலைமையில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.