கரூர், மே 7- தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நித்தியா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், தமிழ்நாடு மருத்துவ நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். துறைவாரி சங்க தலைவர்கள் ஜெயராஜ், ராஜேந்திரன், அறிவழகன், பிரேம்குமார், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் குழந்தை தெரசா நன்றி கூறினார் ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் 2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.