கரூர், மே 4 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் 3.5.2022 அன்று கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் வரவேற்று பேசினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு வரவு-செலவு அறிக்கையை முன் வைத்து பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கடவூர் ஒன்றியத்தில், ஆசிரியரின் தற்காலிக பணியிடை நீக்கத்திற்கு எதிராக நியாயம் கேட்டு போராடிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 7 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, கரூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. இது மிகப்பெரிய ஊழியர் விரோத போக்காகும். 7 பேரின் தற்காலிக பணியிடை நீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு பள்ளிக்க ல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் 16.5.2022 அன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக் குழு சார்பில் மாபெரும் பேரணி நடத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். 1.1.2022 முதல் மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். கடந்த பொது மாறுதல் தேவைப் பணியிடங்களுக்கு (Need Post) மாறுதலில் சென்ற தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. இதை உடனடியாக சரி செய்திட வேண்டும். தொடக்கக்கல்வித் துறையில் இதுவரை நடைபெறாமல் உள்ள மாவட்ட மாறுதல், மனமொத்த மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். டிஎன்எஸ்இடி இணையத்தில் ஆசிரியர்களை நாள்தோறும் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ளக் கூறுவதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும். இணைய வசதியின்மை, தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இணையத்தில் பதிவுகள் மேற்கொள்ளாத சூழலில் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.