கரூர், ஜூலை 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மாநிலக் குழு முடிவு களை விளக்கி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 13.7.2022 அன்று 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் இறந்துள்ளார். இது இயற் கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் உள்ள தாலும் இதுகுறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும். மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும். இந்த குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி, இந்த பிரச்சனைக்காகப் போராட வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் சங்க கரூர் மாநகரத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட 4 பேரை, பசுபதிபாளையம் போலீசார் அதிகாலையில் கைது செய்துள்ளனர். இச்செயலை கரூர் மாவட்டக் குழு வன்மை யாக கண்டிக்கிறது. மேலும் ஜனநாயக விரோதமாக இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, பொது பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளை கைது செய்யும் போக்கை காவல்துறை கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மக்கள் நலன் காக்கும் திமுக அரசு, காவல் துறையின் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கரூர் மாவட்டக் குழு கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.