districts

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கரூர், ஜூலை 12 - கரூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மைலம்பட்டி அருகேயுள்ள கோட்டகரையான்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (28). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இவரும் மாணவி ஒருவரும் நட்பாக பழகியுள்ளனர். லட்சுமணன் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று அந்த மாணவியின் வீட்டுக்கு லேப்டாப் வாங்க சென்ற லட்சுமணன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவியை செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக தங்கி திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போதும் அந்த பெண்ணை லட்சுமணன் கோயில், உறவினர் வீடு என பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி லட்சுமணன் பலமுறை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு திருமணம் குறித்து அப்பெண் லட்சுமணனிடம் கேட்டபோது, பெற்றோர் சம்மதித்தால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு பெற்று வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், லட்சுமணன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கில் கரூர் அனைத்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கிய தீர்ப்பில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இத்தீர்ப்பு நகல் கிடைத்த 3 மாதத்திற்குள் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.