சிதம்பரம், ஜூன் 18- மாணவர்கள் கல்வி பயின்று சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டார். சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு இளங்கலையில் 606 பேர், முதுகலையில் 175 பேர், எம்பில் 29 பேர் என மொத்தம் 810 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்வித் திட்டம், பாடத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் நன்கு படித்து சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கல்லூரி கல்வி இயக்குநர் காவேரி அம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.