கடலூர், ஜூன் 16- முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஈஐடி பாரி ஆலை மட்டத்திலான கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.மணி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் கோ.மாதவன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் ஆர்.தென்னரசு வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மதிமுக விவசாயிகள் அணி செயலாளர் ஜெ.ராமலிங்கம், மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும், மாநில அரசு அறிவித்த ஆதரவு விலையின் 4 ஆண்டு கால நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஈஐடி பாரி ஆலையில் எரிந்த கரும்பு, கழிவு ஆகிய பெயர்களில் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையை உடனே திருப்பி அளிக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சி காலங்களில் ஆலை நிர்வாகம், அரசு, விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்தது போன்று தற்போதும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் குத்தகைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கும் கடன் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு கடன் வழங்க அலைகழிக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து வங்கி முன்பு வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.