கடலூர், ஜன. 23- விருத்தாசலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தனிநபர் தன்னிச்சையாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. தெற்கு பெரியார் நகரில் சூரியகாந்தி பூ தெரு, தமிழர் வீதி, கண்ணதாசன் வீதி, முல்லை நகர், டிரைவர் காலனி ஆகிய பகுதிகளில் 21 பேருக்கு தொற்று இருப்பதால் மேற்ண்ட பகுதிகளை இணைக்க கூடிய அம்பேத்கர் சாலையை தகரம் கொண்டு இரு தினங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் அடைத்தனர். அந்தப் பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அம்பேத்கர் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமானவர்கள் வரக் கூடும் என்பதால், அம்பேத்கர் நகர் தடுப்பை அந்த பிரமுகர் தன்னிச்சையாக அகற்றினாராம். இது விருத்தாசலம் நகரப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, கட்டுப்பாட்டு பகுதிகளில் தன்னிச்சையாக யாரும் தடுப்புகளை அகற்றக் கூடாது. குறிப்பிட்ட பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாகவும், தடுப்புகளை அகற்ற வேண்டுமெனவும் யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.