கடலூர், டிச.5- குண்டு உப்பலவாடி பகுதியில் சேரும் சகதியுமான வீடுகளை வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் இணைந்து தூய்மைப் பணி மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது வீடுகள் சேரும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளன.
வீட்டில் ஓரளவிற்கு தண்ணீர் வடிந்தாலும் சகதியாக உள்ளது, வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில், கடலூர் ஒன்றியம் குண்டு உப்பலவாடி பூந்தென்றல் நகரில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நீர் மணலுடன் சேரும் சகதியுமாக உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில், தண்ணீர் வடியாத பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வீடுகளை தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துதல், சகதியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உழைப்புதான பணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எஸ். வினோத்குமார், மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார், கடலூர் ஒன்றிய செயலாளர் எம்.கலைவாணன், வழக்கறிஞர் சுரேஷ்குமார், ஆசிரியர் வச்சலா, மாணவர் சங்க மாவட்ட தலைவர்கள் சௌமியா, பூபதி, சுகுணா பாரதி, மற்றும் திருமுருகன், அய்யாதுரை உள்ளிட்ட பங்கேற்று தூய்மை பணி மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள திருக்கல் மற்றும் ஏராளமான வீடுகளையும் தூய்மை செய்து கொடுத்தனர். வாலிபர் சங்கத்தின் இந்த பணியை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.