districts

குழந்தைகளை கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள்

கடலூர், பிப்.18- குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் (பிப்.18)தீர்ப்பு வழங்கியுள்ளது.  கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சசிகலா (34). இவர்களுக்கு திருமணமாகி வரோகா (4), விஜயஶ்ரீ என்கிற 3 மாத குழந்தைகள் இருந்தனர். இந்த இரு குழந்தைகளையும் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கழுத்தை நெரித்து கொலை செய்துளளார். பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மாமியார் சா.விஜயா அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்  (பிப்.18) தீர்பளித்த  நீதிபதி பாலகிருஷ்ணன், குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக, ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.  மேலும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகலா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குழந்தைகள் தரப்பில் அரசு வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.