districts

img

சத்தியமங்கலம்: வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பு- நீதிமன்றம் புதிய உத்தரவு

சத்தியமங்கலம் பகுதியில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தடை செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கூட்டம் நடத்தி பிப்ரவரி 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் புலிகள் சரணாலய கள இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ்குமார், தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தெரிவித்தார். கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காணொளி காட்சி மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, இந்த சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களுக்கும், இரவு 9 மணி முதல் 6 மணி வரை இதர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.