அரியலூர், மே 14 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சாமி கும்பிடுவதில், அதே கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், அண்மையில் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது, பிரச்சனையின்றி சாமி கும்பிட அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயிலில் திருவிழா நடந்து வரும் நிலையில், சாமி கும்பிடுவதில் இருதரப்பினரிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோயிலை பூட்ட ஆர்டிஓ உத்தரவிட்டார். பின்னர் தாசில்தார் ஸ்ரீதர் கோயிலை பூட்டினார். இதனால் திருவிழா தடைப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் கோயிலை திறந்து விழா நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வியாழனன்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க மாரியம்மன் கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோயிலை மீண்டும் திறக்கக் கோரி, உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட கிராம முக்கியஸ்தர்கள் முயற்சி செய்தும், அதிகாரிகள் இந்த ஆண்டு திருவிழா நடத்த கூடாது என கண்டிப்புடன் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பல ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வேலைக்கு செல்கிறவர்கள் திருவிழா முடிந்த பிறகு காப்பு அறுத்தால் மட்டுமே வெளியூர்களுக்கு செல்ல முடியும் என்ற சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது. எனவே திருவிழாவை எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி முடிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.