districts

img

ஆசிய ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அரியலூர் வீரர்

அரியலூர், மே 10 - அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள ராமலிங்க நகரில் வசிப்பவர் செல்வம். இவர் வாட்ச் மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  இவரது மூத்த மகன் கார்த்திக், சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டு பயிற்சிகளை பெற்று வந்துள்ளார். இவரின் லட்சியத்திற்கு பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். பல்வேறு பள்ளிகளில் பயின்ற கார்த்திக், கோவில்பட்டியில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று ஹாக்கி பயிற்சி பெற்று வந்துள்ளார்.  இவர் தமிழக அணிக்காக இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி கோப்பைகளை வென்றுள்ளார். இந்நிலையில், ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது. இதில் அரியலூர் வீரர் கார்த்திக் முன்கள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அரியலூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து கார்த்திக்கின் பெற்றோர் கூறுகையில், எனது மகனின் விடாமுயற்சியின் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்காக எனது மகன் விளையாடுவது பெருமையாகவும் உள்ளது என்றனர்.