districts

நிழல் மேற்கூரையை பிரிக்க கூடாது! பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர், செப்.2- அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் அமைந்துள்ளது வைத்தியநாதசுவாமி ஆலயம். இந்த ஆலய நுழைவு வாயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நிழலுக்காகவும் மழைக்காலங்களில் மழையில் இருந்து ஒதுங்குவதற்காகவும் பொதுமக்களின் பங்களிப்புடன் கலந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகரத்திலான மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கூரையை பிரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மேற்கூரை பிரிக்கப்படுவதை கண்டித்து அரியலூர் திருமழபாடி சாலையில் கோவில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேற்கூரையை பிரிக்க கூடாது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் முறையான வழிபாடு நடத்த கோவிலின் செயல் அலுவலர் அனுமதிப்பதில்லை. முக்கியமான நாட்களில் சுவாமி வீதி உலா வருவதை செயல் அலுவலர் தடை செய்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.