districts

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி 57 முறை மனு அளித்த விவசாயி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை

அரியலூர், செப்.19 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன.  இதில் குருவாடியை சேர்ந்த விவசாயி மாணிக்கம் அளித்த மனுவில், “25.9.2019 அன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வரத்து ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும்போது, வரத்து ஏரி ஆக்கிரமிப்பும் ஒரு வாரத்தில் அகற்றப்படும் என செய்தித்தாளில் அதிகாரிகள் விளம்பரம் கொடுத்திருந்தனர். அதுவும் அகற்றப்படவில்லை. மே 1 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரத்து ஏரி ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.  ஆனாலும், ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ஆண்டுதோறும் சுமார் 50 ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன.  இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி இதுவரை 57 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  ஆக்கிரமிப்புகளை அகற்றி விளைநிலங்களை காக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

;