அரியலூர், மே 8 - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்துகளை கூறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வழக்குரைஞர்களுக்கு ‘மனிதம்’ எனப்படும் மனித உரிமை அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமையன்று பாராட்டு விழா நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். பின்னர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரில், 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடைப்பிடிக்கும் சித்தாந்தமான மனுஸ்மிருதி, பெண்கள், ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகள் ஆகியோரை மனிதர்களாகவே பார்ப்பதில்லை.
இந்த சித்தாந்தம், ஆளும் கட்சியின் சித்தாந்தமாக அரசியல் அதிகார அரியணையில் ஏறி இருக்கும்போது, அதன் செல்வாக்கு சமூகத்தில் ஓங்கி வருகிறது. பல தீர்ப்புகளில் நீதிபதிகள் மனுஸ்மிருதியை படியுங்கள் என சொல்வதை பார்த்திருக்கிறோம். எனவே இந்த மனுஸ்மிருதி சித்தாந்தத்திற்கு எதிராக, கருத்தியல் ரீதியாக போராட வேண்டியுள்ளது.
இவ்வகையான சட்டங்களை கொண்டு வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளவர்கள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால் அவர்களது நடத்தை விதிகளின்படி குற்றம் என்று கருதி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி தரப்பின் அரசு சிறப்பு வழக்கறிஞர் அபிராமன், மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, வழக்கறிஞர்கள் ரெங்கராஜன், என்.ராமர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், வழக்கறிஞர்கள், சிஐடியு பி.துரைசாமி, அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், வாலிபர் சங்கம் ரவீந்திரன், பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாய், தங்கைகள், சகோதரர்கள், மாதர் சங்க செயல்பாட்டாளர்கள், மனித அமைப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக செயல்பட்ட அனைவருக்கும் கேடயம் வழங்கி பாராட்டப்பட்டது. மனிதம் மாநில உபகுழு வழக்கறிஞர் எம்.ஜே.லெனின் நன்றி கூறினார்.