districts

img

விருதுநகர் இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி அதிரடி சோதனை  

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.    

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் தாயாருடன் வசித்து வருகிறார். அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை  வீடியோவாக பதிவு செய்துள்ளார்.  

இதனிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  

இதற்கிடையில் ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.    

ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8 குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.  

இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அக மது ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் இராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இந்த  வழக்குகளுக்கான கோப்பு கள் விசாரணை அதிகாரி சிபிசிஐடி அதிகாரி வினோதினி யிடம் ஒப்படைத்தார். வெள்ளிக்கிழமை காலை சிபிசிஐடி எஸ்பி விருதுநகர் அலுவலகத்திற்கு சென்று 4 பள்ளி மாணவர்கள் தவிர மீதமுள்ள குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணையைத் துவக்கினார்.  

இந்நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருந்த ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் உட்பட 4 பேரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைதிகள் நால்வரும் இன்று காலை மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.