வேலூர், ஜூன் 26- சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் கோட்டை காந்தி சிலையில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஞாயிறன்று (ஜூன் 26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெள்ளை புறாக்களை பறக்க விட்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் காவல் துறையினர், காவல் துறை பயிற்சி பள்ளி மாணவிகள், என்சிசி மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் போதை பொருள் தடுப்பு குறித்து நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மது மற்றும் போதை பொருட்களால் தனி மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது. மேலும் அவர் அந்த போதைக்கு அடிமையாகி பொருளாதாரத்தை இழக்கிறார். இதனால் சமுதாயத்திற்கும் பாதிப்பு, சுற்றுசூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே யாரும் போதை பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, ஆனந்தகுமார், வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.