வேலூர், மார்ச் 10- தமிழ்நாட்டில், வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் தமிழ்நாட்டில் இது தொடர்பான பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் மன்றத்தில் வட மாநில தொழிலா ளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தி னருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:- வேலைக்கு அமர்த்தும் வடமாநில தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களையும் பெறவேண்டும். பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேலைக்கு அமர்த்தும் போது கைரேகைகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.