districts

சட்டக் கல்லூரி மாணவர் மீது காவல்துறை தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், ஜன.24 - சென்னையில் சட்டக் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை, எனவே அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிக கடுமையாக தாக்கியுள்ளனர். காவல் துறையின் இத்தகை செயல் மனித உரிமைக்கு எதிரானது. இது போன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டுமொத்த காவல் துறையினருக்கும், ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது.  

சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கைது செய்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதோடு, மாணவன் மீதே பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுங்கையூர் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், மனித உரிமைக்கு எதிரான ஆணவப் போக்கையும் காட்டுகிறது.  மாணவர் அப்துல் ரஹீமை மிகவும் கடுமையாக தாக்கிய காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணி இடை நீக்கம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் கடுமையான பிரிவுகளை சேர்க்காமல் சாதாரண பிரிவுகளை சேர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதும், இதுவரை அவர்களை கைது செய்யாமல் இருப்பதும் வருந்தத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள்  மற்றும் காவலர்கள் மீது எந்த வித பாரபட்சமு மின்றி கடுமையான வழக்கு பிரிவுகளை சேர்த்து பதிவு செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.