தஞ்சாவூர், மே 11 - பேராவூரணியில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தற்போது 18 வார்டுகள் உள்ளன. ஏறத்தாழ 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேராவூரணியைச் சுற்றியுள்ள 53-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும், பேராவூரணி பகுதியிலுள்ள வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில், ஜூம்ஆ பள்ளிவாசல், ஆதனூர் தேவாலயங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பேராவூரணி பகுதியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து அதிகமாக காணப்படும். மேலும் தற்போது நீதிமன்றம் சேது சாலையில் அமைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்குகள் தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்க தினந்தோறும் காவல் வாகனங்கள் வந்து செல்கின்றன.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி 108 வாகனங்கள் வேகமாக நகரப் பகுதிக்குள் வந்து செல்கின்றன. சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்பிடி தளத்தில் இருந்து பேராவூரணி வழியாக தினந்தோறும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. பேராவூரணி பகுதி தென்னை விவசாயம் மிகுந்த பகுதியாகும். இங்கு விளைந்த தேங்காய் மற்றும் மூலப்பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் சென்னை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு பேராவூரணி வழியாகவே கொண்டு செல்கின்றன. பேராவூரணியைச் சுற்றியுள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தேங்காய் உரி மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சு மற்றும் பித்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படும் மூலப்பொருளான தேங்காய் உரிமட்டையை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகமாக பேராவூரணி நகர பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதேபோல், தேங்காய் மட்டை கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளான தேங்காய் பித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, மிகப்பெரிய அளவிலான கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு, சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை மூலம் தினந்தோறும் பேராவூரணி வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு முறை ரயில்கள் இயக்கப்படும் நேரங்களில் சேது சாலை மற்றும் நீலகண்டபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படுவதால் சேது சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கும். மேலும், திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலில், நூற்றுக்கணக்கான திருமணங்கள் ஒரே நேரத்தில் நடக்கும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வருவதாலும், வாகனங்கள் பெருக்கத்தாலும் அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பேராவூரணி பகுதியில் ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மொய் விருந்து விழாக்கள், திருமண விழாக்கள் நடைபெறும் காலங்களில் சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து விடுவதாலும், சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர்படுத்த வாகனங்கள் மற்றும் மக்கள்தொகை பெருகி வரும் பேராவூரணி பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.