கும்பகோணம், ஜூலை 27- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வியாழக்கிழமை (ஜூலை 28) அன்று நடைபெறவிருந்த பருத்தி ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு சார்பில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து மறைமுக ஏலத்தின் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. திருப்பனந்தாள், திருவிடைமருதூர் வட்டாரங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 400 விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த 6 வாரமாக விவசாயிகள் திருப்பனந்தாளுக்கு கொண்டு சென்று அறுவடை செய்த பருத்தியை விற்று வந்தனர். ஒவ்வொரு வாரமும் சராசரியாக ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைகூட பருத்தி கொள்முதல் நிலையம் தனியார் இடத்தில் தற்காலிகமாக ஷெட் அமைத்து வாடகைக்கு இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, விற்பனை கூடத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் 7-வது வாரமாக வியாழனன்று நடைபெறவிருந்த பருத்தி ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பனந்தாளுக்கு வழக்கமாக பருத்தி மூட்டைகளை கொண்டு செல்லும் விவசாயிகள், மற்ற கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.