கும்பகோணம், மே 11- 2021 ஜனவரி மாதம் ஒரு கிலோ கோரப்பட்டு விலை ரூ.3700 விற்றது, 2022 மார்ச் மாதம் ஒரு கிலோ ரூ.6800 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் கோரப் பட்டின் விலை 110 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்வால் பட்டு கைத்தறி நெசவுத் தொழில் வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி கும்பகோணம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், பட்டு வியாபாரிகள், கோரா வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே.ஆர்.சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் ஏ.செல்வம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஒருங்கிணைப்புக் குழு பொருளாளர் சுப்புராமன், மாமன்ற உறுப்பினர் அனந்தராமன், சிஐடியு அனந்தராமன் உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.