districts

16 ஆண்டுகள் கழித்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில் இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

தஞ்சாவூர், ஆக.26 -  16 ஆண்டுகள் கழித்து, காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் சென்னை சென்று வரும் வகையில் இயக்கப்பட்ட விரைவு ரயிலுக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  தென் மத்திய ரயில்வே துறை மூலம் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில், சென்னை - எழும்பூர் - விழுப்புரம் - மயிலாடுதுறை - பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை மாலை 6:21 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடைந்தது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர், கார்டுகளுக்கு இனிப்பு வழங்கியும், சால்வை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சென்னை சென்று வரும் வகையில் இயக்கப்பட்ட ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை இராமேசுவரத்தில் இருந்து திரும்பிய ரயில், பட்டுக்கோட்டை வழியாக சென்னை, அங்கிருந்து செகந்திராபாத்திற்கு சென்றது.  அறந்தாங்கி சென்னையில் இருந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு அறந்தாங்கிக்கு வருகை தந்த செகந்திராபாத் - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை, அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த்  மற்றும் ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துரை மற்றும் வர்த்தக சங்கம், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அறந்தாங்கி பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.