districts

img

சிதம்பரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடு நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்

சிதம்பரம், ஜன். 10- சிதம்பரம் நகரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார். சிதம்பரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் முன்னிலை வகித்தார். நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் பேசுகையில், 33ஆவது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மழைக் காலங்களில் மார்பளவு தண்ணீர் தேங்குகிறது. எனவே அந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால் கரைகளை நிரந்தரமாக உயர்த்த வேண்டும் என்றார். வார்டு உறுப்பினர் ஜேம்ஸ் பேசுகையில், விஜயராகவன் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வரி வசூலிக்காமல் விட்டு விட்டு, தற்போது கெடுபிடியாக வரி வசூலிக்கப்படுகிறது. எனவே காலக்கெடு வழங்கி வசூலிக்க வேண்டும் என்றார். மேலும் பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  பின்னர் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து நகரமன்றத் தலைவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக வரி வசூலிக்காமல், தற்போது அதிகாரிகள் கெடுபிடியாக மொத்தமாக வரி வசூல் செய்யக்கூடாது. நகர்மன்ற உறுப்பினர்களுடன் சென்று, கால அவகாசம் வழங்கி வரி வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகரில் 10 நாட்களில் பன்றி, நாய் மற்றும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும், குழாய் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் ரூ.8 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்றார்.