districts

img

கோவை தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி காலைக்கடன் கழிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தடாகம், நரசிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே உணவு தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது. அதனை ரோந்து செல்லும்  வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.  மேலும் விவசாய தோட்டம், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் யானைகள் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்கின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதிகளில் உலா வந்த ஒற்றைக்காட்டு யானை இன்று காலை புளியந்தோப்பு என்ற பட்டா நிலத்தில் நின்றதாகத் தெரிகிறது. இதை அறியாத அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (30). என்பவர் காலைக்கடன் கழிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கியதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அங்கு வந்த 108 ஆம்புலென்ஸ் அவசரக்கால மருத்துவர் பரிசோதனை செய்தபோது தேவராஜ் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப்   பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.