சென்னை, ஏப்.20- இந்தியாவில் 30 விழுக்காடு பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகளைக் கையாண்டால் கல்லீரல் செயலிழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பெண்கள் நலம் மற்றும் கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடை பெற்றது. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு அதில் கலந்து கொண்டு மகளிர் நலனுக்கான கையேட்டை வெளியிட்டார். இந்த கருத்தரங்க நிகழ்வில் 400 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் வசந்தாமணி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, சென்னை மெனோபாஸ் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹெப்சிபா கிருபா மணி, ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்து வமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.