districts

ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம்: மாநகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 30 - சட்டமன்ற விதிகளுக்கு முரணாக செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை மாநகராட்சி கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் ஜீவன் வலியுறுத்தினார். மாநகராட்சி கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசுகையில் இதனை அவர் வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ், விசிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து மேயரிடம் கேட்டபோது, “சட்ட ஆலோசனைகள் பெற்று கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய உறுப்பி னர் ஜீவன், உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 75 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், மூலக்கொத்தளம் மயானம் பூங்காவாக மாற்றப்பட உள்ளது. அங்குள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை செப்பனிட்டு பராமரிக்க வேண்டும். அண்ணாசாலையில் உள்ள தலைவர்களின் சிலைகளை சுற்று வண்ண விளக்குகளால் ஆன செயற்கை நீரூற்று அமைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர், அடுத்த மாதம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மன்றக் கூட்டம் தொடங்கும், மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகளை சுற்றி அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.