districts

மாநகர பேருந்துகளில் அதிக ஒலியுடன் பாடல்களை இசைக்க தடை

சென்னை, ஜூலை 19 - பயணிகளின் கோரிக்கையை ஏற்று அதிக ஒலியுடன் கூடிய திரைப்பட பாடல்களுக்கும் முகம் சுழிக்கும் வகையிலான பாடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் செயல்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பாடல்கள் இசைக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற நேரங்களில் அதிக ஒலியுடன் கூடிய திரை இசைப்பாடல்களும் இசைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள்-நடத்து நர்கள் இடையே தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. சில நேரங்களில் முகம் சுழிக்கும் வகையிலான பாடல்கள் இசைக்கப்படுவதாகவும், இது பெண் பயணிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிற புகாரும் இருந்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலரான பாண்டியன் என்பவர்  மாநகர போக்குவரத்து துறையில் புகார் அளித்திருக்கிறார். அதிக ஒலியுடன் பாடல் இசைக்கப்படுவதால் பயணிகள் முக்கியமான அலுவலகம் சார்ந்த செல்போன் அழைப்புகளை கூட எடுத்து பேச முடியாத நிலையும் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர பேருந்துகளில் அதிக ஒலியுடன் கூடிய திரைப்பட பாடல்களை இசைப்பதற்கு மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அதே நேரத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பாடல்கள் இசைக்கப் படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பேருந்து நிலைய அறிவிப்பு குறித்த புதியமுறை இதற்கிடையே சி.பி.எஸ். திட்டத்தின் அடிப்படையில் பேருந்து நிலையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் திட்டத்தை போக்கு வரத்துக் கழகம் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் 500 பேருந்துகளில் இந்த முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனை சென்னை மாநகரில் இயக்கப்படும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் செயல்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.