திருப்போரூர், ஜூன் 16- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூச்சு, தொண்டை வார்டில் செவித் திறன் பரிசோதனை நிபுணர் காலிப் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 4வது மாநாடு திருப்போரூரில் தோழர் தே.லட்சுமணன் நினைவரங்கத்தில் ஜூன் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.தாட்சாயினி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் என்.அன்பு சங்கத்தின் கொடியினை ஏற்றிவைத் தார். எம்.வெள்ளிகண்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கே.லிங்கநாதன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் பேசினார். மாவட்ட செயலாளர் வி.அரிகிருஷ்ணன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் எப்.அருள்ராணி, வரவு,செலவு அறிக்கையும் சமர்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதிஅண்ணா, மாநில செயலாளர் பி.ஜீவா, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எம்.செல்வம் ஆகி யோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி பேசினார்.
தீர்மானம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி, தடையற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும், செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு அனைத்து நகரப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தனி அடையாள அட்டை வழங்கி 4 மணி நேர வேலையுடன் முழு சம்பளம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடு, பிரதமர் வீடு திட்டத்தில் அரசு ஆணையின் படி முன்னுரிமை வழங்க வேண்டும், மாவட்டத்தில் படித்து முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.வெள்ளிகண்ணன், மாவட்ட செயலாளராக எஸ்.தாட்சாயினி, மாவட்ட பொருளாளராக எப்.அருள் ராணி உள்ளிட்ட 37 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.