districts

சாலை வசதியில்லாத மலை கிராமம்: பச்சிளம் குழந்தை பலி

வேலூர், மே 20- வேலூர் அருகே சாலை வசதியில்லாததால் மலை கிராமத்தில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமம். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. தற்போது பயன்படுத்தி வரும் பாதை வனத்துறைக்கு சொந்தமானது. இதனால் சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய மண் சாலையில் மழை நீர் செல்லும் ஓடை கால்வாய் 8 இடங்களில் உள்ளதால் சாலையை கடந்து செல்வதும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சுந்தரேசன் மனைவி விஜயாவுக்கு (22) கடந்த 14 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லமுடியவில்லை. இதனால், மலை கிராமத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் குழந்தைக்கு உடல் நிலை குறைவு ஏற்பட, கத்தாழம்பட்டு துணை சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தையை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.