விருதுநகர் சந்தை: பாசிப் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு, பாமாயில் விலை உயர்வு துவரம் பருப்பு விலை சற்று குறைவு
விருதுநகர், அக்.29- விருதுநகர் சந்தையில் பாமாயில், பாசிப் பருப்பு மற்றும் உருட்டு உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை யானது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்பு விலை சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.1340 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1360க்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.12,500க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு வகையானது ரூ.17,200-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.500 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குவிண்டால் ஒன்று ரூ.16,500க் விற்பனையாகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பாமாயில், உளுந்து ஆகியவை விலை உயர்ந்து வருவ தால், பலகாரக் கடைகளில் இனிப்பு மற்றும் கார வகைக ளின் விலை உயர்த்தி விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வத்தல் நாடு ஏ.சி வகைகள் மார்க்கெட்டுக்கு சுத்தமாக வரத்து இல்லை. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
தனியார் விடுதியில் நகையை திருடியவர் கைது
விருதுநகர், அக்.29- விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகிலேயே தங்கும் விடுதியும் உள்ளது. இதில் மதுரை மாவட்டம் எல்.புதூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் மகள் யுவஸ்ரீக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனவே, விடுதியில் உள்ள அறையில் உறவினர்கள் அனைவரும் தங்கியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து விடுதி அறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த 10.5 பவுன் தங்க நகை மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து சுந்தர்ராஜ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வந்தனர். விசாரணையில் இராஜபாளையம், ஆவரம்பட்டி யைச் சேர்ந்த ஜோதிமணிகண்டன் (22) என்பவர் நகையைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நான்கு கட்டங்களாக போராட்டம் : ஜாக்டோ-ஜியோ மாவட்ட கூட்டத்தில் முடிவு
சிவகங்கை, அக்.29- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாவட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரன், முத்துப்பாண்டியன், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் சங்கர், இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு மாநில முடிவுகளை எடுத்து கூறினர். பல்வேறு சங்கங்களின் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 1.4.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதி யத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல் படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1 அன்று மாவட்ட தலைநகரங்க ளில் மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நவம்பர் 15 முதல் 24-ஆம் தேதி வரை ஆசிரியர்- அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம், நவம்பர் 25 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், டிசம்பர் 28 அன்று சென்னையில் லட்சக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட நடவடிக்கைகளை மிகவும் எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காரில் குட்கா, புகையிலை கடத்தி வந்த இருவர் கைது
விருதுநகர், அக்.29- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே காரில் குட்கா,புகையிலை கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் குட்கா, புகையிலை என மொத்தம் 51 மூடைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். அவற்றினை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த முகம்மது அப்துல் சலீம் (31) மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேத்தான்சிங் (28) ஆகிய இருவரை கைது செய்தனர்.