நாகர்கோவில், அக். 1- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் “குமரி சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 2024 அக்டோபரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் “குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வேண்டுமெனவும், குமரி சங்கமம் நடைபெறும் இடத்தினை தயார் செய்தல், நிகழ்ச்சியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தீயணைப்பு வாகனங்களுடன் மீட்பு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணிம், உதவி இயக்குநர் கலைப்பண்பாட்டு துறை கோபால கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு அலுவலர் சத்திய குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிறைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.