மதுரை, ஜூன் 11- மதுரை காமராசர் பல்கலைகழக கல்லூரி யில் துறைத்தலைவர் அவதூறாக பேசுவதாக மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வருக்கு உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் பொருளாதார துறைத்தலைவரான ரெஜினா தேவி என்ற பேராசிரியை மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும், மாணவர்கள் சிலரை செமஸ்டர் தேர்வு எழுத விடாமலும் ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து மிரட்டுவதாகவும் கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் மாணவர்கள் சிலர் புகார் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் மாணவர்களின் புகார் கடிதம் குறித்து உரிய விளக்கம் அளிக்கக்கோரி உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி நிர்வாகத் திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணை குழு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனிடையே உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பேராசிரியையிடம் கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தி வருகிறார்.