மதுரை காஸ்ட்ரோ படிப்பகத்தின் 50-ஆம் ஆண்டு தொடக்கவிழா 74-ஆவது குடியரசு தினத்தன்று (26.1.2023-வியாழன்) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை காஸ்ட்ரோ அழகர் ஏற்றினார். படிப்பகத்தின் கரும்பலகையில் தவ றாது தகவல் எழுதி வரும் சாலமோன், புதுப் பிக்கப்பட்ட கரும்பலகையை திறந்து வைத்து தனது முத்து முத்தான எழுத்துக்களை பதித்தார். இந்த நிகழ்வில், காஸ்ட்ரோ படிப்பகத்தை உருவாக்கி யவர்கள், வளர்த்தவர்கள் என 65 பேர்களின் பெயர்களை முத்துப்பாண்டி உணர்வுப்பூர்வமாக படித்தார். இந்த 65 பேரும் இப்போது நம்மிடையே இல்லை. இந்நிகழ்விற்கு தலைமை வகித்துப் பேசிய பிச்சைமணி, மதுரையின் அடையாளம் காஸ்ட்ரோ படிப்பகம். கிட்டத்தட்ட மதுரை கோட்ஸ் ஆலையில் 18 ஆயிரம் பேர் பணிபுரிந்தார்கள். அவர்கள் அனைவரும் மதுரையைச் சுற்றியுள்ள கிரா மப்புறங்களிலிருந்து வந்து குடியேறிய விவசாயத் தொழிலாளர்கள் என்றார். 1950-56-ஆம் ஆண்டுகளில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களில் கணிசமானவர்கள் பஞ்சாலைத் தொழிலா ளர்கள். மாநாட்டில் பெண் குரலில் ஒருவர் பாடி னார். பின்னர் தான் தெரிந்தது அவர் இன்றைய இசைஞானி இளையராஜா என்று கூறியதோடு மதுரை நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு காஸ்ட்ரோ படிப்பகத்தின் பங்களிப்பை விவ ரித்தார்.
எங்களை மனிதர்களாக்கியவர் “காஸ்ட்ரோ”
காஸ்ட்ரோ அழகர் பேசுகையில், பிடல்ஃகாஸ்ட்ரோ படிப்பகம் இல்லையென்றால். இந்த அழகர் இல்லை. காங்கிரஸ் கொடியையும், திமுக கொடியையும் பார்த்த எனக்கு மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்ற போது சிவப்புக்கொடிகள் காட்சியளித்தன. அப்போது தான் சிவப்புக் கொடியைப் பற்றி அறிந்தேன். அன்றைக்கு இளைஞர்கள் சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர்கள்தான். மோகன் எம்ஜிஆர் ரசிகர். நான், ஓட்டை மணி, பால்ச்சாமி அனைவரும் சிவாஜி ரசி கர்கள். ரசிகர்களாக இருந்த நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டோம். காஸ்ட்ரோ படிப்பகம் உருவாகவில்லையென்றால் அநேகமாக நான், மோகன் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை திசைமாறியிருக்கும்.
பரிசுத்தவான்களின் இடமாக படிப்பகம்
தவறான பழக்கங்களை மேற்கொண்ட பலர் அவற்றிலிருந்து விடுபட்டு மீள்வதற்கு “பரி சுத்தவான்களின் இடமாக” இருந்தது காஸ்ட்ரோ படிப்பகம். எனது வீட்டில் காஸ்ட்ரோ, ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் படங்களை வாங்கிச் சென்று மாட்டினேன். அப்போது எனது தந்தையார் ஏலச்சீட்டு பிடித்து வந்தார். சீட்டு ஏலம் எடுக்க வந்திருந்தவர்களில் பலர் என்னைப் பற்றியும் படத்தைப் பற்றியும் கூறிவிட்டார்கள். என் தந்தை என்னை அழைத்து இவர்கள் யார் எனக் கேட்டார். இவர்கள் எல்லாம் தலைவர்கள் என்றேன். இவர் களைப் பற்றி யார் சொன்னது எனக் கேட்டதற்கு வெற்றிலை மென்று கொண்டேயிருக்கும் இராயப்பன் தான் என்றேன். அப்போது கரிமேடு போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளைச்சாமி என்றொரு இன்ஸ்பெக்டர் இருந்தார். கூட்டம் கூடினாலோ, வேஷ்டி, கைலியை தூக்கிக் கட்டியிருந்தாலோ அடிக்கத் தயங்க மாட்டார். அவரிடம் அடி வாங்கியதும் உண்டு. கூட்டம் கூடினால் பிடித்துச் சென்றுவிடுவார். காலையில் சென்றால் கம்யூனிஸ்ட்டுகள் பற்றி கூறும் இராயப்பன் என்னைப் பிடித்துக் கொள்வார். மாலையில் சென்றால் வெள்ளைச் சாமி இன்ஸ்பெக்டர் பிடித்துக் கொள்வார். எனவே காலை, மாலை நேரங்களில் வெளியே செல்வ தற்கு எனது தந்தை தடை விதித்தார்.
எங்கள் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல
ஒரு நாள் படிப்பகத்தின் அருகில் நான் சிக ரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். ஜலதோஷம் பிடித்திருந்ததால் சிகரெட்டில் விக்ஸ் தடவி யிருந்தேன். அப்போது அங்கு வந்த வேணு கோபால் என்ற போலீஸ்காரர் என்ன குடிக்கிறாய் என்றார். சிகரெட் என்றேன். சிகரெட் தான் அதில் என்ன கலந்திருக்கிறது என்றார். விக்ஸ் தேய்த்திருக்கிறேன் என்றேன். அதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அவர் அங்கிருந்து சென்று விட்டார். அன்றைக்கு அந்த போலீஸ்காரரிடம் “போதை, பெண்களை கேலி செய்தல், சமூக விரோதிகளுக்கு காஸ்ட்ரோ படிப்பகத்தில் இட மில்லை. இனிமேல் என்னை மட்டுமல்ல, இங்குள்ள யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றேன். என்னை அப்படி பேசவைத்ததற்குக் காரணம், “பயம் ஒருவனை கோழையாக்கி விடும். உண்மையிருப்பவனிடம் பயம் இருக்காது என மோகன் கூறிய வாசகம் தான்”.
மஞ்சள்மேடு பகுதி தீ விபத்து
மஞ்சள்மேடு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட போது நான், மோகன் உள்ளிட்ட தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரம் உணவு வழங்கினோம். பல நாட்கள் சோறு சமைத்த வண்டியை தள்ளிச் செல்லும் பொறுப்பை ஏற்றவர் ப்ரீத்தியின் கணவர் ராஜசேகர் என்றார். கே.கே.கண்ணன் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட புத்தகம் ஒன்றை நான் படித்தேன். அதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிய வில்லை என்ற தகவலை புத்தகத்துடன் வி.வாழ வந்தானை சந்தித்துக் கூறினேன். அவரோ, “ நீ கீரை அதிகம் சாப்பிடு” புரியும் என்று நகைச் சுவையாக கூறினார். பால்ச்சாமி பேசுகையில், “ இன்றைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகம் செயல்படுகிறது. அதற்கு வித்திட்டது காஸ்ட்ரோ படிப்பகம் தான். இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டோம். முதல் விளையாட்டுப் போட்டி மதுரை ரயில்வே மைதானத்தில் நடத்தி னோம். மாவட்ட, மாநில அளவிலான போட்டி களை நடத்தியுள்ளோம். முதலில் பரிசுகள் மட்டும் வழங்கினோம். பின்னால் சான்றிதழ் வழங்கி னால் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என்றனர். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வாலி பர் சங்க விளையாட்டுக் கழகத்தை முறையாக பதிவு செய்தோம். எங்களிடம் பரிசும், சான்றித ழும் பெற்ற பலர் தமிழக காவல்துறையில், ரயில்வே யில், வங்கிகளில் பணியாற்றுகின்றனர், வாலிபர் சங்கம் நடத்திய விளையாட்டுப்போட்டிகளில் அன்றைக்கு இருந்த சேரன், சோழன், பாண்டி யன், பல்லவன் போக்குவரத்துக்கழக அதிகாரி கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய இளைஞர்களை தேர்வு செய்தனர். இளைஞர் களை ஈர்க்க, அவர்களை வென்றெடுக்க விளை யாட்டு முக்கியமானது என்றார்.
50 பேருடன் விடிய விடிய வேலை
முத்துப்பாண்டி பேசுகையில் “ ஒரு காலத்தில் மே தினம், படிப்பக விழா என்றால் தென்னங் குருத்துக்களை தொங்க விடவும், கொடி கட்டவும் 50 பேர் இருப்பார்கள். வேலையின் போது மைக்செட்காரரிடம் சிவாஜி பாட்டு போடு என்று ஒரு செட்டும், எம்ஜிஆர் பாட்டு போடு என்று ஒரு செட்டும் கூறும். இந்தப் பாடலோடு தான் எங்கள் பணியை விடியற்காலை முடிப்போம். புதன்கிழமை இரவு (25.1.2023-புதன்) 50-ஆம் ஆண்டு விழாவிற்கு கொடிகட்டிய போது நான்கு பேர் இருந்தனர். இது அயர்ச்சியாக இருந்தது. எப்போதும் போல் கலகலப்பாக படிப்பகம் செயல்பட வேண்டும், செயல்பட வைப்போம்” என்றார்.
நிரந்தரமான இடத்தில்
வசந்தன் பேசுகையில், அன்றைக்கு இருந்த காஸ்ட்ரோ படிப்பகம் இன்று இல்லை. உட்காரு வதற்கு இப்போது ஒரு கல் மட்டுமே உள்ளது. வளர்ச்சிப்போக்கில் எந்த மாற்றமும் நிகழலாம். எனவே நிரந்தரமாக ஒரு இடத்தில் படிப்பகம் செயல்பட வேண்டும். அது ஒரு நூலகமாக அமைய வேண்டும் என்றார்.இந்த கோரிக்கைக்கு ஒட்டு மொத்த அரங்கமும் கைதட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தது.
ரீசார்ஜ்-குளுகோஸ்
தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், “ காஸ்ட்ரோ படிப்பகம் இருக்கும். கருத்தியல் இருக்கும். தோழர்கள் இருப்பார்கள். நம்முடைய அரசியல் செயல்பாடுகளை பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவைகள் மூலம் நாம் விரிவு படுத்த வேண்டும். காஸ்ட்ரோ படிப்பகத் தோழர்கள் விழுதுகள். இந்த விழுதுகளின் கடந்தகாலப் பணிகளை இன்றைய இளைஞர்கள் (விதைகள்) உள்வாங்கிக் கொண்டு அவற்றை உரமாக்கி வளர வேண்டும். காஸ்ட்ரோ படிப்பகத் தோழர்களின் நிகழ்வு எனக்கு ரீசார்ஜ் செய்தது போலவும், குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டது போன்றதொரு திருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். ஒரு முறை திமுக பேச்சாளர்களில் ஒருவரான தீப்பொறி ஆறுமுகம், தோழர் பி.ராமமூர்த்தியை தனக்கே உரிய பாணியில் விமர்சித்துள்ளார். அவர், பேசுவதைக் கேட்க ஒரு கூட்டத்திற்கு ஏராள மான தோழர்கள் சென்றிருந்தோம். தோழர்கள் அதிகளவில் வந்திருப்பதை அறிந்த தீப்பொறி ஆறுமுகம், சாதுர்யமாக தோழர் பி.ராமமூர்த்தி யின் பணிகளைப் புகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். அசந்து போனது மட்டுமல்ல குழப்பத்துடனும் திரும்பினோம் என்றனர் படிப்ப கத்தின் பழைய தோழர்கள். நிகழ்வில் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதிக்குகுழுச் செயலாளர் வை.ஸ்டாலின், மாதர் சங்கத் தலைவர் ப்ரீத்தி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசி னர். ஒரு பத்திரிகை செய்ய முடியாததை, ஒரு காட்சி ஊடகம் செய்ய முடியாததை ஒரு கரும்பலகையும், ஒரு துண்டு சாக்பீசும் செய்யும் என்பதற்கு காஸ்ட்ரோ படிப்பகம் மட்டுமல்ல. லுமும்பா, மாக்சிம் கார்க்கி, போன்ற படிப்பகங்கள் இன்றைக்கும் உணர்த்தி வருகின்றன. தொகுப்பு: ச.நல்லேந்திரன், ஜெ.பொன்மாறன்