districts

img

‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜூலை 9 - 7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோ ட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7 ஆவது  புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்துகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவையொட்டி ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், நூலகம், பூக்கடை, காய்கறிக்கடை, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியர்

‘புதுக்கோ ட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி(பொ), கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் (பொ), கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி புத்தகத் திருவிழா ஒருங்கிணை ப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், எம்.வீரமுத்து, எஸ்.டி.பாலகிருஷ்ணன், ஜீவி, க.சகாசிவம், விமலா, ராசி.பன்னீர்செல்வன், பவுனம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கடந்த 6 புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது. ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, காய்கறி, பூக்கடை உள்ளிட்ட சிறுகடை வியாபாரிகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உட்பட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளது சிறப்புக்குரியது. அனைத்துப் பகுதியினரையும் வாசிக்கப் பழக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி புத்தகத் திருவிழா சென்று கொண்டிருக்கிறது.

120 அரங்குகள்

ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இட நெருக்கடியை சமாளிப்பதற்காக 7-ஆவது புத்தகத் திருவிழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க மாமன்னர் கல்லூரி திடலில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு 107 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வருடம் 120 அரங்குகள் வரை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். 

அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், கோளரங்கங்கள், மூன்று முதல் 5 வயது குழந்தைகளை எப்படி படிக்கப் பழக்குவது என்பதற்கான பயிற்சிகள் எனத் திட்டமிட்டு இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளோம்.

குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வேளாண்மைத் துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார். 

பின்னர், புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ

கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் ஜபருல்லா, கல்லூரி முதல்வர் (பொ) ந.சுலோச்சனா, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணமேல்குடி அரசுப் பள்ளி

மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற நிகழ்வினை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார்.  

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் புத்தகங்களை வாசித்தனர். மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகபிரியா, ஜெனிட்டா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் நூலகங்களில் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வு நடைபெற்றது.

பொன்னமராவதி முழுநேர கிளை நூலகத்தில் நடந்த நிகழ்வுக்கு தலைமை நூலக வாசக வட்டத் தலைவர் சந்திரன் வரவேற்றார். நூலகர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். நூலகப் பணியாளர் தமிழரசி நன்றி கூறினார்.

பொன்னமராவதி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை வகித்தார். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பொன்னமராவதி வட்டார நிர்வாகிகள் ராசு, கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.