புதுக்கோட்டை, மார்ச் 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.மருதப்பாவின் படத்திறப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளராகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகியாகவும் பணியாற்றிய தோழர் பி.மருதப்பா உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது படத்திறப்பு மற்றும் நினைவாக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான பாப்புடையான்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. படத்திறப்புக்கு கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். தோழர் பி.மருதப்பாவின் படத்தை திறந்து வைத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை புகழஞ்சலி உரையாற்றினார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், கீரனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பவுல்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர் கே.மகாலெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் அல்லிமுத்து, ஒன்றியக் கவுன்சிலர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.