districts

img

பேக்கரியில் தீ விபத்து

பெரியபாளையம், டிச. 9- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (43). இவர் பெரியபாளையம் பேருந்து நிலையம் எதிரே ஜெய்ஸ்ரீவாரி மிட்டாய்ஸ் என்ற பெயரில் இனிப்பு கடை, பேக்கரி நடத்தி வருகிறார்.  மோகன்குமார் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் பேக்கரியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். புயல் காரண மாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (டிச. 9) விடியற்காலை பேக்கரியில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக பெரிய பாளையம் காவல் நிலைய நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேக்கரியின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், அரை மணி நேரமாக போராடியும் கதவை திறக்க இயலவில்லை. இதனால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு இரும்பு கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்வாய் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.