districts

img

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி

திருவண்ணாமலை, ஜன. 7- திருவண்ணாமலை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஆடியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலம் விவசாயத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளிக்க முடியும். இதன்மூலம் தினசரி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இப்பயிற்சியை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் 10ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 10 நாட்களாகும். இப்பயிற்சி கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61 ஆயிரத்து 100 தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தை பெறுவார்கள். இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும். இந்த திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணைய தளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவும் இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.