districts

img

சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, ஜூன் 16- திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம், உதயராஜா இணைந்து காஞ்சி பகுதியில் கள ஆய்வு செய்த போது, வயல்வெளியின் ஊடே பாதி புதைந்த நிலையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்வெட்டு இருப்பது தெரிய வந்தது. பலகை கல்லின் முன்புறம் முதல் பாதியில் நிதானத்தைக் குறிக்கும் சூலம், அதன் அருகே இருபுறமும் விளக்கும் செதுக்கப்பட்டு மேலே சந்திரனும் சூரியனும் காட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 13 வரியும் கல்லின் பின்புறம் 15 வரியும் எழுதப்பட்டுள்ளது ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும்   இந்த கல்வெட்டானது ராஜராஜ சோழனின் 14ஆம் ஆட்சியாண்டில் காஞ்சியில் உரையும் ஆளுடையார் கரைகண்டீசுவரமுடைய நாயனார்க்கு நில தானம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டின் எழுத்தைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கடைபகுதியில் கி.பி 1216-1246 வரை ஆண்ட மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு என்பது உறுதியாகிறது. அவரது 14 ஆண்டு கால ஆட்சியின்  கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1230 ஆகும். மேலும், தற்போதுள்ள கரை கண்டேஸ்வரர் கோவில் கட்டுமானம் பிற்காலத்தைச் சேர்ந்த நாயக்கர் காலத்தியது. அக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில் இக்கல்வெட்டு மூலம் இக்கோவில் 800 வருடங்களுக்கு மேல் பழமையான சோழர் காலத்துக் கோவில் என்பது உறுதியாகிறது. மேலும் இக்கோவிலில் உள்ள சாமி பெயர் சோழர் காலத்தில் ஆளுடையார் கரைகண்டீஸ்சுவரமுடைய நாயனார் என்று வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழ பேரரசு பல்வேறு தாக்குதல்களாலும், அரசியல் சூழல்களாலும் வலிமை குன்றி இருந்த நிலையிலும், கோவில்களுக்கான தானம் தொடர்ந்து நடைபெற்றுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.