அவிநாசி, ஜன.25- திருமுருகன்பூண்டியில் நகர மன்ற கூட்டத்தில், குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம், சிபிஐ, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் குமார் தலைமையிலும், ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னிலையிலும் துவங்கியது. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை நகர்மன்ற தலைவர் குமார் முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜன் பேசுகையில், “குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம், மாதந்தோறும் ரூ.25 லட்சம் செலவினம் ஏற்படும். இதனால் நகராட்சிக்கு அதிக செலவினம் ஏற்படும் நிலை உருவாகும். நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தனியார்மயம் ஆக்கப்படுவார்கள். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது, என்றார்.
இதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 ஆவது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் பேசுகையில், இத்தீர்மானம் மக்களினுடைய வரிப்பணத்தை தனியாருக்கு கொடுப்பதாகும். பொது நிதி அனைத்தும் தனியாருக்கு வழங்கப்பட்டால் நகர மன்ற உறுப்பினர்கள், வார்டில் எப்படி சேவை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதை குறிப்பிட்டு பேசிய நகராட்சி ஆணையர், கடிதத்தை படித்துவிட்டு தீர்மானம் குறித்து பேசுங்கள் என்றார். அதற்கு, இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தூய்மை பணியாளர்கள் அரசாங்கத்திடமே ரூ.500 மட்டுமே ஊதியமாக பெறுகிறார். தற்பொழுது இப்பணிகள் தனியாருக்கு விடப்பட்டால் தொழிலாளிகளுக்கு 300 முதல் 350 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். இதனால், தொழிலாளியின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும், என தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சிபிஐ, அதிமுகவும் வெளிநடப்பு
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் கதிர்வேல் பேசுகையில், இத்தீர்மானம் தொழிலாளர்களை பாதிக்கக்கூடியதாக உள்ளது. எனவே, இதனை நடைமுறைபடுத்த கூடாது என வலியறுத்தி வெளிநடப்பு செய்தார். இதேபோன்று அதிமுகவை சேர்ந்த திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் பத்து பேரும், இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர். திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர் மட்டுமே கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். இதனால் பெரும்பான்மை நகர்மன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
முன்னதாக, சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி மற்றும் சிபிஐ நகராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் கதிர்வேல், லீலாவதி, கோகிலா, மகேஸ்வரி ஆகியோர் கூட்டத்தின்போது, கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.