districts

img

திடீர் கனமழையால் கலங்கித் தவிக்கும் விவசாயிகள்

திருவாரூர், ஜன.3 - வேளாண் தொழில் என்பது நிச்சயமற்ற தொழிலாக மாறி விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறது. தண்ணீரிலும், கண்ணீரிலும் விவசாயிகள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  கடந்த வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்கள் பெய்த மழை டெல்டா மாவட்டங்களில் பெரும் அச்சத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியது. அவர்கள் பட்ட மனவேதனை சொல்லி மாளாது.  சிபிஎம் - கள ஆய்வு இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் பாதிப்பு குறித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்தும் அறிந்துகொள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கொரடாச்சேரி ஒன்றியத்தில் இளவங்கார்குடி, பெரும்புகளுர் ஊராட்சிகளுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால், மூத்த உறுப்பினர் கே.வீரய்யன் ஆகியோர் ஆண், பெண் விவசாயிகளை சந்தித்தனர்.  ஊராட்சி பகுதிக்குள் நுழையும் போதே சாலையில் இருபுறமும், பசுமை போர்த்தி கதிர்விட்டிருந்த பயிர்களும் அறுவடைக்கு தயாராக இருந்த பொன்நிற நெல்மணிகளும் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி தவித்துக் கொண்டிருந்தது. 

இளவங்கார்குடி ஊராட்சியில் பெண் விவசாயி பஞ்சவர்ணம்(62) கூறுகையில், “என்னங்கய்யா பண்ணுறது, ஒன்னும் புரியல, யாரும் வந்து பாக்கவும் இல்ல, இந்த மழையில எல்லாம் பாழாய்ப் போச்சு, நீங்கதான் பாத்து ஏதாவது செய்யணும் என்றார். பெரும்புகலூர் ஊராட்சியில் ராமமூர்த்தி(57) என்ற விவசாயி கூறுகையில், “எங்கள் பகுதிக்கு வெட்டாற்றில் இருந்து ஓடம்போக்கி பாசனம் மூலமாக விவசாயம் நடைபெறுகிறது. சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் சுமார் 166 ஏக்கர் நிலங்கள் இதேபோன்ற நிலையில் தான் உள்ளது. தண்ணீர் வடிவதற்கு வழியில்லை. நிச்சயமாக பயிர் முழுவதும் அழிந்துவிடும். பாய்கால் வடிகால் வசதி மேம்படுத்தப்படாமல் உள்ளது. விவசாயிகள் இந்த இழப்பில் இருந்து மீண்டு வருவது மிகுந்த சிரமம் என்று கூறினார். நீலக்குடி, பொம்மாநத்தம் போன்ற பகுதிகளிலும் தலைவர்கள் நிலைமையை கேட்டறிந்தனர்.

அங்கு கே.எஸ்.சேகர் என்ற விவசாயி (64), “1009 நெல்ரகம் ஒரு ஏக்கரில் பயிர் செய்திருந்தேன். இந்த மழையால் கண்டிப்பாக 50 சதவீதம் பாதிப்படைந்திருக்கும். விவசாயிகளை பொறுத்தவரை நிலைகுலைந்து போயிருக்கிறோம்” என்று கூறி வேதனைப்பட்டார். வழக்கமாக இந்த அறுவடைக் காலத்தில் முதன்முதலில் அறுவடை செய்யப்படும் நெல்லில் பொங்கல் செய்து  சூரியனுக்கும், இயற்கைக்கும் படைக்கும் வழக்கம் டெல்டா மாவட்டங்களில் உள்ளது. அந்த நடைமுறைக்கு கூட இந்தமுறை வழியில்லாமல் போய்விட்டது என்று விவசாயிகள் வேதனைப்பட்டனர்.  சமூக ஆர்வலரும், விவசாயியுமான ஜி.வரதராஜன் கூறுகையில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மூழ்கியுள்ளன. தூர்வாரும் பணி என்பது நேர்மையாகவும், தரமாகவும் நடைபெறுவதில்லை. வடிகால் வசதி மோசமாக உள்ளது. ஏ,பி-வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் கவனிப்பதில்லை. விவசாயிகளின் ஒரு வருட உழைப்பு இந்த மழையால் வீணாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்.  

ஜி.சுந்தரமூர்த்தி கள ஆய்விற்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கூறுகையில் “சற்றும் எதிர்பாராத இந்த மழை விவசாயிகளை வேதனையில் தள்ளியுள்ளது. கடந்த காலங்களில் பெய்த மழையால் தாளடி, சம்பா சாகுபடியில் பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியில் தை பொங்கல் நெருங்குகிற வேளையில், நெல்மணிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த இழப்பை விவசாயிகள் எப்படி தாங்கிக் கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றிய மோடி அரசு உடனடியாக மத்தியக்குழுவினரை மீண்டும் அனுப்பி சேத விவரங்களை சேகரித்து மாநில அரசுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை அறிவித்துள்ள நிலையில் அதனை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி தமிழக அரசு பாரபட்சமில்லாமல் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.  அடுத்த சாகுபடிக்கு உதவிட... விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக சிறப்பு திட்டங்களை வல்லுநர்களுடன் கலந்து பேசி சிறப்புதிட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு விவசாயிகள் வழக்கமாக மேற்கொள்ளும் பயிர், உளுந்து ஊடுபயிர் சாகுபடிக்கு உதவிட வேண்டும்.

கொள்முதல் நிலைய குளறுபடிகளை களைந்து சிரமமில்லாமல் விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அரசு உதவிட வேண்டும். மேலும் கோடை உழவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.  விவசாயிகளின் நிலை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் சாகுபடி நடைபெற்றிருந்த நிலையில் கனமழையால் தற்போது விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது. கள ஆய்வின் போது அனைத்து விவசாயிகளும் ஒருமித்த குரலில் கூறியது இதுவரை எங்கள் நிலைமை குறித்து கேட்பதற்கு, ஆறுதல் கூறுவதற்கு, நம்பிக்கை அளிப்பதற்கு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ ஒருவரும் வரவில்லை. வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளும் வரவில்லை என்று கவலை தோய்ந்த குரலில் கூறினர்.  விவசாய தொழிலை விட்டுவிடலாமா என்ற நிலைக்கு மனதளவில் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளை, அவர்தம் குடும்பத்தினரை பாதுகாக்க ஆளும் அரசுகள் உண்மையான அக்கறையுடன் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி புதன்கிழமை முதல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள்
எஸ்.நவமணி, எஸ்.நீதிராஜன்