தஞ்சாவூர், ஜூன் 10-
தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத் தீர்வின்படி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1.02 கோடி இழப்பீட்டுக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அமித்குமார் பொடார் (46) திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார் பேட்டரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி சாலையில் 2021, டிசம்பர் 2 ஆம் தேதி அமித்குமார் பொடார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வந்து மோதியது. இதனால், பலத்த காயமடைந்த அமித்குமார் பொடார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, பூதலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்) தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.வடிவேல் விசாரித்தார்.
மேலும், மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டது. இதையடுத்து விபத்தில் இறந்த அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களான அவரது மனைவி மீனு (42), மகள்கள் சாரு (15), யாஷிகா (10), மகன் குணால் (6), அம்மா பிரபா (74) ஆகியோருக்கு ரூ. 1.02 கோடி இழப்பீடு வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து, அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களின் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிடம் ரூ.1.02 கோடிக்கான காசோலை சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.வடிவேல், விபத்து தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி முன்னிலையில் காப்பீட்டு நிறுவன வழக்குரைஞர் கிருஷ்ணசாமி வழங்கினார்.