districts

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி மோசடி

தஞ்சாவூர், செப்.9 - கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி, இளைஞரிடம் வாட்ஸ் அப் மூலம் ரூ.69 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச் 6 அன்று வாட்ஸ் அப்-பில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், ‘கிரப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாககூறி’ மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபரிடம், இளைஞர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ‘ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இதில், முதலீடு செய்யும் பணத்துக்கு நானே பொறுப்பு’ என்று கூறி மூளைச்சலவை செய்துள்ளார். அந்த மர்ம நபர் சொன்னதை நம்பி இளைஞரும் பல தவணையாக சுமார் ரூ.69.85 லட்சம் வரை மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.  நான்கு மாதங்கள் கடந்த நிலையில், முதலீடு செய்த பணத்துக்கு லாபமும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து இளைஞர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய நபரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இளைஞர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினர், இளைஞரிடம் மோசடி செய்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர். இதுகுறித்து இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தரப்பில் கூறுகையில், “ஆன்லைன் செயலியில் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் மெசேஜ் அனுப்பி வருவதால், உங்களது வங்கிக் கணக்கு எண், ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அதுகுறித்து தெரிவிக்க கூடாது. இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும். எனவே, இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினர்.