விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இதில், கேரளத்தைச் சேர்ந்த 4 பெண்கள், கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குவதாகவும், அவர்களில் முஸ்லிமாக இருக்கும் ஒரு பெண், மற்றவர்களை மூளைச் சலவை செய்து, முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாகவும், பின்னர் அவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா வழக்கு தொடர்ந்தார். ஆனால், கேரள உயர்நீதிமன்றத்தை நாடுமாறு கூறி, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு புதிய மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.